Wednesday, December 14, 2011

ஜகத் சித்திரம் : வசன கவிதை

பாரதி எழுதிய ஒரு சிறு நாடகத்திலிருந்து ஒரு காட்சி.
பறவையினங்களும், மிருகங்களும் தமக்குள் உரையாடுதல்
போல.....


 
கிளி பாடுகிறது: -- தைர்யா, தைர்யா, தைர்யா --
              தன்மனப் பகையைக் கொன்று
              தமோ குணத்தை வென்று
              உள்ளக் கவலை யறுத்து
              ஊக்கந் தோளிற் பொறுத்து
              மனதில் மகிழ்ச்சி கொண்டு
              மயக்க மெலாம் விண்டு
              சந்தோஷத்தைப் பூண்டு
              தைர்யா, ஹுக்கும், ஹுக்கும்!
              ஹுக்கும், ஹுக்கும்!
              ஆமடா, தோழா!
              ஆமாமடா,
              எங்கோவா, எங்கோவா!
              தைர்யா, தைர்யா, தைர்யா!

கிளி: --  கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக்காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக்
காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை.

எருமை மாடு: -- பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும்,ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே? இதன் காரணம் யாது?

நாகணவாய்: -- டுபுக்! வெயில் காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் 
மிருக மனிதர்களைக்காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு
சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக
நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம்
அதிகம். மிருக மனிதஜாதியார்களுக்குள் இருப்பதைக்காட்டிலும்
எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக
சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக்
காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியதுபோல்,
காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள்
குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம்
தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள்.
அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.

மற்றப்பக்ஷிகள்: -- வாருங்கள், வாருங்கள், வாருங்கள் துயரத்தை அழிப்போம்,கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.

Tuesday, December 13, 2011

சக்தி : வசன கவிதை


பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.
குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை
    புரியாது; உள்ளம் குழலிலே ஒட்டாது.
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஒட்டும்
     குழல் பாடும்.
இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின்
     தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே
     இசையுண்டாக்குதல் -- சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன.
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும்
    யார் சுருதிசேர்த்துவிட்டது? சக்தி.
“ஜரிகை வேணும்; ஜரிகை!” என்றொருவன் கத்திக்கொண்டு
    போகிறான், அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டுகொண்டேன்.
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்,
    ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன்.
தோற்றம் பல. சக்தி ஒன்று.


 - மகாகவி பாரதி
.

Monday, December 12, 2011

காற்று - வசன கவிதை

இதைப்படித்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
என்ன ஒரு எள்ளல் , துள்ளல் , எவ்வளவு சொன்னாலும் உறைக்காத
தமிழனுக்கு ஒரு வசைப்பாங்கு..!



மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும்
    ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
    உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
    ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
    ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி
     யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது
     ஈசனுடைய விதி.
சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
     சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும்
     மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்
     கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து
     வருகிறார்கள்.
குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல
    உடைகளுடன் குடியிருப்பாயானால்.
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.


.

Sunday, December 11, 2011

பாட்டுடைத்தலைவன்

 இன்று என் ஆசான் மகாகவி பாரதியின் பிறந்தநாள்.
எளிய நடையில் அவனது கவிதை ஒன்று...!


காணி நிலம்வேண்டும், -- பராசக்தி
காணி நிலம்வேண்டும்; -- அங்குத்
தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -- அந்தக்
காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்; -- அங்குக்
கேணி யருகினிலே -- தென்னைமரம்
கீற்று மிளநீரும்,

பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம்
பக்கத்திலே வேணும்; -- நல்ல
முத்துச் சுடர்போலே -- நிலாவொளி
முன்பு வரவேணும்;-அங்குக்
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற் படவேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.   

பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள்
கூட்டுக் களியினிலே -- கவிதைகள்
கொண்டு தரவேணும்; -- அந்தக்
காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன்
காவ லுறவேணும்; -- என்றன்
பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப்
பாலித் திடவேணும்.






Friday, December 9, 2011

நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்



எனது தேவைக்கென
பிரதிகள் எடுத்துக்கொள்ள
வசதியாய் நெகட்டிவ்கள்
சேமித்து வைக்கிறேன்
பிறர் அவ்வளவு விரைவில்
அறியாவண்ணம் அவற்றைப்
பெட்டகத்தினுள்
சேமித்து வைக்கிறேன்.

அந்த நெகடிவ்வின் அருகில்
புதிதாக எடுக்கப்பட்ட
பாஸிட்டிவ்வை வைத்து
நோக்கும் போது இன்னும்
பொலிவுடன் நெகட்டிவ்வே
பரிமளிக்கிறது

எத்தனை பாஸிட்டிவ்கள்
உண்டாக்கப்படினும்
நெகட்டிவ்வில் உள்ள
பூதம் போன்ற பிம்பமே
மனதில் பாசி போல்
படிந்து கிடக்கிறது.





நாட்கள் கடந்து போவதால்
நெகட்டிவ்களின் மேல்
உண்டாகும் சிறு கறைகள்
மேலும் அதன் மீதான
ஞாபகங்களை வலிய
மனதில் படியச்செய்கின்றன

நெகட்டிவ்களை வெறுமனே
கையில் வைத்துப்பார்ப்பதில்
இன்பம் இருப்பதில்லை
அதை சற்று உடம்பிலிருந்து
தொலைவில் வைத்துப்பார்ப்பதில்
எனக்கு அலாதிப்பிரியம்.

சில நெகட்டிவ்கள் தாம்
அடங்கியிருக்கும்
உறைகளின் மேல்
தேதி குறிப்பிடப்படாவிடினும்
அது பற்றிய ஞாபகங்களை
தானாகவே என்னுள்ளிருந்து
வெளிக்கொணர்ந்து விடுகிறது



பல சமயங்களில்
அந்த நெகட்டிவ்களிலிருந்து
பாஸிட்டிவ்களை
உண்டாக்க நான் விழைவதில்லை
அவற்றை வெளி உலகிற்கு
காண்பிப்பதில் எனக்கு
உடன்பாடிருப்பதில்லை

பாதுகாப்புக்கருதி
கண்ணாடி உறைக்குள்
வைத்திருப்பினும்
கண்ணாடி உறை
வழியாகத்தெரியும்
நெகட்டிவ்வே
சலிக்காமல்
பார்க்கத்தூண்டுகிறது

நான் எப்போதும்
பாஸிட்டிவ்களை
சேமித்து வைப்பதில்லை
மேலும் அவை சேமித்து
வைக்குமளவிற்கு
பெறுமானமுமில்லை.


.

Saturday, December 3, 2011

கவிதை



அடித்து, திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை



Thursday, December 1, 2011

காதல் திசை

நவீனவிருட்சம் இதழில் வெளிவந்த கவிதை


வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,

செ
ங்
கு
த்
தா

த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,

ன்தாம்லவ துந்ருமிடஇ
அராபிக் எழுத வேண்டும்

உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!



.