Wednesday, August 27, 2014

துளிப்பாக்கள்



யாரும் இறங்கவும்
ஏறவும் வேண்டியதில்லை
பரிசலும் ஆறும்
இடைவிடாது
ஆடிக்கொண்டுதானிருக்கிறது

**
என்னுடன் பயணிக்கும்
யாருக்கும் என்னுடன் பேச
ஏதோ ஒன்று இருக்கிறது

**

என் மதத்தில்
தண்டிக்கவியலாத கடவுளை
அடுத்த மதத்தில்
தண்டிக்கலாமென்றிருக்கிறேன்

**
உன்னைக்கண்டால்
கடவுள்களுக்கும்
சொப்னஸ்கலிதம் நேரும்

**
கூட்டுப்புழுக்காலத்தில்
அனுப்பிய செய்தி
வண்ணத்துப்பூச்சியின்
காலம் வரை வந்து சேரவில்லை

**

மூங்கில் துளைகளைப்புணரும் காற்று
இசைக்குழந்தையை
உடனே பெற்றெடுக்கிறது

**

பென்சில் சீவும்போது
கிளம்பிய வாசம்
மரம் கடைசியாகத்
தக்கவைத்துக்கொண்டது

**

ஏணியிலும்
முதற்படிக்கே
துயரம் அதிகம்.

***




  .

Sunday, August 17, 2014

‘லேடி கேங்க்ஸ்ட்டர்’

இருள் கவ்விய மாலைப்பொழுது. அவள் விளக்குகளை எரிய விட்டாள் அந்த சுங்கச்சாவடி’யின் சின்ன அறைக்குள் சாலை முழுக்க காலியாகக்கிடந்தது. வெகு தூரம் சென்றுவிட்ட எப்போதோ கடந்து சென்ற வாகனத்தை கண்களைக்குறுக்கி பார்க்க முயன்று தோற்றாள். அத்தனை பெரிய சாலையில் அவள் மட்டுமே தனியாக அமர்ந்திருப்பது அவளுக்கு அத்தனை சுகமான விஷயமாக இருந்ததில்லை எப்போதும். சுவர்க்கோழிகள் யோசித்து யோசித்து இடைவிட்டு கிறீச்சிக் கொண்டிருந்தன. அவற்றை கவனித்துக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் ஒரு சிறிய கார் வருவது தெரிந்தது. விளையாடிக் கொண்டிருந்த செல்’லை அணைத்துவிட்டு காசு கொடுத்தால் திறந்து விடும் லீவர் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறதாவென எட்டிப்பார்த்து உறுதி செய்து கொண்டாள். வந்து நின்ற காரில் கண்ணாடியைக் கீழிறக்கியவன் ‘திறந்து விடு’ என்றான். கட்டணம் செலுத்தினால் திறக்கப்படும் என்று மென்மையாகக் கூறிப்பார்த்தாள்.

கேட்டவன் விடுவதாயில்லை. ‘காசெல்லாம் இல்லை’ எனக்கூறி சட்டைப்பைக்குள் இருந்த சிறிய ரக துப்பாக்கியை எடுத்து குறி வைத்தான் சிரித்துக்கொண்டே அவளை நோக்கி. வேறு வழியின்றித்திறந்து விட்டாள். செல்ல முற்பட்டவன் அவளுக்கே அந்த துப்பாக்கியை பரிசளித்துவிட்டான். ஆச்சரியப்பட்டு  கொஞ்சம் தயங்கிவள் அதை வாங்கி வைத்துக்கொண்டாள். மெல்லச் சிரித்துக்கொண்டே சுங்கச்சாவடியை விட்டு காரை விரைந்து செலுத்தினான் அவன்.

விரைந்து சென்ற காரை விழி மாற்றாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். தூரத்தில் சென்று புள்ளியாக மறையும் வரை. பிறகு அவன் கொடுத்த துப்பாக்கியை தடவிப்பார்த்தாள். கைக்கடக்கமான நிஜத்துப்பாக்கி தான். மேஜை ட்ராயரை இழுத்து உள்ளே வைத்து பூட்டிவைத்தாள்.

ஊரெல்லாம் சுற்றிக்களைத்தவன் இரண்டு நாட்கள் கழித்து அந்தச்சாலையோர கஃபெட்டீரியா’வில் உள்ளே நுழைந்தான். யாருமற்ற அந்த ஒரு மூலையிலிருந்த மேஜையைப்பார்த்து அமர்ந்துகொண்டான். ஆணை கொடுக்க அழைத்தான் அந்தப்பக்கம் பார்த்து அவனுக்கு முதுகு காட்டி நின்ற அவளை. அவளே தான் வந்தாள். ‘என்ன வேண்டும் இப்போது?’ ‘ஹ்ம்.. ஒரு காஃபி’ என்றான். கொண்டு வரச்சென்றவள் ஒரு கணம் நின்று அவனை திரும்பிப்பார்த்துவிட்டு சென்றாள்.

‘எல்லாம் சரி, உன் பாஸை எப்படிக்கொன்றாய் ?’ எனக்கேட்டான். ‘ஹ்ம்.. இந்த துப்பாக்கியால் தான் என்றவள்’ அவன் கொடுத்த அதை எடுத்து மேஜையில் வைத்தாள். ஒதுக்குப்புறமாக இருக்கும் சாலையோர கஃபெட்டீரியா, ஆளரவம் ஏதுமில்லை சரேலென அந்தத்துப்பாக்கியை கையிலெடுத்தவன்,அவளை நோக்கி தவறாமல் குறிவைத்தான். ‘பார் இப்போதும் என்னிடம் காசு இல்லை’ ‘ கல்லாவிலிருக்கும் அத்தனை காசையும் வழித்தெடுத்துவா’ என ஆணையிட்டான்.மறுபேச்சில்லாமல் சென்றவள் இருந்த சொற்பப் பணத்தையும் கொஞ்சம் சில்லறையையும் சொண்டு வந்து கொடுத்தாள்.

‘என்ன இவ்வளவு தான் வருமானமா இன்று?’ எனக்கேட்டவனுக்கு ‘பாஸ் எல்லாப்பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டார் வழக்கமாக பேங்குக்கு’ என்றவளிடம்  மேலும் ஏதும் கேட்கத்தோணாமல் கையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்தக்கஃபெட்டீரியாவை விட்டு வெளியே சென்றான்.

பின்னால் ஒலிக்கும் குரல் கேட்டுத்திரும்பியவன்,’என்ன ? என்றான். ‘எல்லாத்தையும் நீயே எடுத்துக் கொண்டு போனால் எப்படி ? எனக்கும் கொஞ்சம்தா’வென்றாள். ‘பணம் எனக்கு வேணும், துப்பாக்கியை நீயே வைத்துக்கொள் என்றான். சரியென்றவள் துப்பாக்கியை வாங்கிக்கொண்டாள்.

வாங்கியவள் தவறாது அவனைக்குறி வைத்து ‘ஹ்ம்..இப்ப அந்தப்பணத்தை எடு’ என்றாள். ‘ஹ்ம்.. எனச்சலித்துக்கொண்டே அத்தனையையும் கொடுத்துவிட்டான் அவளிடம்’. கொடுத்துப்பின் விலகிச் சென்றவனை பின்னாலிருந்து மீண்டும் அழைத்தாள் அவள். ‘என்னைத்தனியாக விட்டுவிட்டு நீ மட்டும் எங்கு போகிறாய் நானும் உன் கூட வருவேன்’ என்றவளை சிரித்துக்கொண்டே கைபிடித்து அழைத்துச்சென்றான்.

அவள் துப்பாக்கியை பையில் செருகிக்கொண்டாள். சாலையில் தொடர்ந்தும் நடக்கும் போது சில்லறை சன்னமாக ஒலியெழுப்பியது.


.